4 வழிச்சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள்
தூத்துக்குடி, மே 4-தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு போதிய பராமரிப்பு மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் போர்டுகள் இல்லாததே காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள செடிகள் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுவதில்லை. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளைதடுக்கும் வகையில், ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத பகுதிகளில்தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு சார்பாக ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மத்திய மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் சோலையப்ப ராஜா, செய்தி தொடர்பாளர் செந்தில் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி, மே 4 -தமிழகத்திலேயே அதிக நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களை மக்களவைத் தேர்தலில் ஈடுபடுத்தியது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா பாராட்டு தெரிவித்தார்.தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 2019-மக்களவைத் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்றது. நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் ஆ.தேவராஜ் வரவேற்புரையாற்றினார். காமராஜ் கல்லூரி முதல்வர் து.நாகராஜன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில், தேர்தல் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலான நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். அதில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது பாராட்டுதலுக்குரியது என்றார். நாட்டு நலப் பணித்திட்டஅலுவலர் பா.பொன்னுத்தாய் நன்றியுரையாற்றினார்.
தொடர் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது:17 பவுன் நகை மீட்பு
திருநெல்வேலி, மே 4-நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் உத்தரவின்்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தி சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர் திருட்டு தொடர்பாக கோவில்குளத்தை சேர்ந்த ஆறுமுகக்குட்டி மகன் மகேஷ் (19), ராதாபுரம் அருகே உள்ள பட்டர்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த பேரின்பம் மகன் பார்த்திபன் (20) ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.மேலும் இந்த வழக்கில் திருட்டு நகைகளை வாங்கியதாக அம்பை அப்பர் தெருவை சேர்ந்த திருப்பதி என்பவரை போலீசார் வெள்ளியன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.