tamilnadu

தற்போதைக்கு முழு ஊரடங்கு இல்லை தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி,  ஜூலை 23- தூத்துக்குடியில் தற்போதைக்கு முழு ஊரடங்கு இல்லை எனவும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும்  மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார். வியாழனன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 52 ஆயிரம் பேருக்கு கரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 4241 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா அதிகம் பாதிக்க கூடிய பகுதிகளை முன் கூட்டியே கணித்து அந்த பகுதிகள்  தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு வீடு வீடாக தெர்மல் ஸ்கிரினிங், ஆக்சிஜன் அளவு சோதனை செய்வது, வீடு வீடாக கபசுரகுடிநீர் வழங்குதல், ஆகியவை செய்யப்பட்டு வருகிறது.  

இந்த நடவடிக்கைகளால் கரோனா பரவல் முன் கூட்டியே கட்டுப்படுத்தப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 15 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாநகராட்சி சார்பில் உரிய எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் தடுப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 600 மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் காயல்பட்டணத்தில் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அங்கும் இது போல் தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரோனா பாதித்தவர்களை விட அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களால் தான் அதிகம் நோய் பரவுகிறது என தெரிய வந்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரம் கரோனா மாதிரிகள் எடுக்கவும் படுக்கைகளை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமா என்பதை தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார். பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்தால் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.