தூத்துக்குடி, அக்.23- தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற ஜான்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான தோணியில் ஜெயந்திரன் ஐயாதம்பி தலைமையில் ஜோசப் லீனஸ் மைக்கேல், சுரேஷ் இருதயசாமி, டேவிட்ராஜா கிளைட்டன், உல்ஸ்டன் கிளைட்டன், ராஜேஸ் சேவியர், செல்வம் ஞானம், விஜிலஸ், மைக்கேல் ஞான சித்தன் ஆகிய 9 பேர் சென்றனர். மாலத்தீவு அருகே கடலில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9பேரும் கடலில் தத்தளித்தனர். அப்போது மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றொரு தோணியில் வந்தவர்கள் கடலில் தத்தளித்த 9பேரையும் மீட்டு, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.