தூத்துக்குடி:
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இனாம்மணியாச்சி ஊராட்சி. இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் தாய்க் கிராமமான இனாம்மணியாச்சி கிராமத்திலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும். கழிவுநீர் செல்ல தனியாக கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இனாம்மணியாச்சி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு, ஒன்றியச் செயலர் தெய்வேந்திரன், கிளைச் செயலர் அழகுசுப்பு, அமமுக மேற்கு ஒன்றியச் செயலர் ஜெய்சங்கர், மாவட்ட திமுக பிரதிநிதி முத்துராமன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பெருமாள்சாமி, அரசு ஓய்வூதியர் சங்கத் தலைவர் அய்யலுசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.போராட்டக் குழுவினருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வசந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போராட்டக் குழுவினருடன் வட்டாட்சியர் மணிகண்டன், கிராமநிர்வாக அலுவலர்கள் சண்முகப்பிரியா (இனாம்மணியாச்சி), நாகலட்சுமி (கோவில்பட்டி), வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.