தூத்துக்குடியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இயங்கி வந்த அந்த பட்டாசு ஆலையில் திடீரென, இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறி கட்டடம் முழுவதுமாக தரைமட்டமானது. மேலும் இந்த வெடி விபத்தில் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த ராமர், ஜெயராஜ், தங்கவேல், கண்ணன் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.