tamilnadu

img

தூத்துக்குடிக்கு தப்பிவந்த மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அந்நாட்டிடமே ஒப்படைப்பு

தூத்துக்குடி:
கப்பலில் தூத்துக்குடிக்கு தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைய முயன்ற மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர், அந்நாட்டிடமே இந்திய அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டார்.மாலத்தீவின் அதிபராக இருந்த அப்துல்லா யமீனை கொலை செய்ய முயன்ற வழக்கில், அந்நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அண்மையில் தண்டனை ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை அன்று வந்த விர்கோ 9 என்ற இழுவைக் கப்பலில் அகமது அதீப் தப்பி வந்திருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்தக் கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்காத அதிகாரிகள், சில நாட்டிகல் மைல் தொலைவில் கப்பலை நிறுத்தி வைத்து சோதனை மேற்கொண்டு அகமதுஅதீப் இருப்பதை உறுதி செய்தனர். அரசியல் நிர்ப்பந்தங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளால் தனது உயிருக்குஆபத்து இருப்பதாக எண்ணி இந்தியாவுக்கு தப்பி வந்ததாகஅகமது அதீப் தரப்பில் கூறப்பட்டது. அவரிடம் இரு நாட்கள் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையை தொடர்ந்து சர்வதேச கடல் எல்லையில், மாலத்தீவு அதிகாரிகளிடம் அகமது அதீப் ஒப்படைக்கப்பட்டார். விர்கோ 9 கப்பலில் இருந்த ஒரு இந்தியர் உள்பட 9 மாலுமிகளும் மாலத்தீவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.