tamilnadu

ரயில் பயணச் சீட்டு விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது டிஆர்இயு வலியுறுத்தல்

மன்னார்குடி, ஆக.24- ரயில்வே பயணச் சீட்டுகள் விற்பனையை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிஆர்இயு கேட்டுக் கொண்டுள்ளது.  இது பற்றி சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது, ரயில்வே கவுன்டர்கள் தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரம், ரயில் நிலைய தனியார் பயணச் சீட்டு முகவர் மற்றும் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு அல்லாத பயணச் சீட்டுகளை ரயில் பயணத்திற்கு பெறலாம். இது தவிர ஜன் சதார்ன் டிக்கெட் புக்கிங் சேவாக் என அழைக்கப்படும் பொதுஜன பயணச் சீட்டு சேவையாளர் ரயில் நிலையத்திற்கு வெளியே பொது இடத்தில் பயணச்சீட்டு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் ரயில்வே கவுன்டரில் வழங்குவது மாதிரியான பயணச் சீட்டுகளை வழங்குவார்கள். பயணி ஒருவருக்கு கூடுதலாக ரூ.2  கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கிறார்கள். பயணிகள் வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்க இவர்களிடம் சீட்டுகள் வாங்குகிறார்கள். தெற்கு ரயில்வேயில் 102 பொதுஜன பயணச் சீட்டு சேவையாளர் அனுமதி பெற்று இருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 48 பேர். இவர்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கும் அனுமதியும் உண்டு. அதற்கு ரூ.5 கூடுதல் கட்டணம். முன்பதிவு அல்லாத மூத்த குடிமகன்களுக்கான பயணச் சீட்டுகள் மற்றும் பிளாட்பாரம் சீட்டுகள் வழங்க இவர்களுக்கு அனுமதி உண்டு. கிராமப்பற ரயில் நிலையங்களில் ஒப்பந்தகாரர்களையும், பாதையோர ரயில் நிலையங்களில் தனியார் முகவர்களையும் படிப்படியாக திருச்சி கோட்டம் நியமித்து விட்டது. ஒரு சில நிலையங்கள் தகுதியான ஆட்கள் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது. தற்போது 72 ரயில் நிலையங்களில் பொதுஜன பயணச் சீட்டு சேவையாளர்களை நியமிக்க ஒப்பந்த புள்ளி திருச்சி கோட்டம் வெளியிட்டு உள்ளது.  இதில் திருச்சி, திருச்சி டவுன், பாலக்கரை, தஞ்சை, விழுப்புரம், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, வேலூர், விருத்தாச்சலம், மன்னார்குடி, கடலூர் என அதிக பயணிகள் ஏறும் ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளன. ஒப்பந்தக் காலம் மூன்று ஆண்டு, இதை நிறுவ ரூ.2 லட்சம் செலவு. விண்ணப்பிக்க கடைசி நாள் 2019 செப்டம்பர் 23 என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ரயில்வே முன்பதிவு பயணச் சீட்டுகள் ஆன்லைன் விற்பனை 66 சதவீதமாக உயர்ந்து விட்டது. இதனால் ரயில் முன்பதிவு கவுன்டர்களில் 75 சதவீதம் முன்பதிவு அல்லாத கவுன்டர்களோடு நாடு முழுவதும் இணைக்கப்பட்டு விட்டது. இப்போது முன்பதிவு அல்லாத பயணச் சீட்டுகள் விற்பனையினை முற்றிலுமாக தனியார் வசம் கைமாற்றி விடும் ரயில்வே திட்டமிடுகிறது. இதனால் ரயில்வே குமாஸ்தாக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பாசஞ்சர் ரயிலில் 45 கி.மீ தூரம் பயணத்திற்கு ரூ.10 பயணக் கட்டணம் செலுத்தும் சாமானியன் கூடுதலாக ரூ.2 சேவையாளர்கள் கட்டணமாக செலுத்துவது 20 சதவீதம் கட்டண உயர்வுக்கு ஒப்பானது. சேவையாளர்கள் கட்டணம் ரூ.1 ஆக இருந்தது.  கடந்த ஆண்டு ரூ.2 ஆக உயர்ந்தது. மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. மேலும் பயணக் கட்டணத்துடன் பயணச்சீட்டு விற்பனைக்கான செலவையும் பயணிகளே சுமக்கும் நிலையும் உருவாகியுள்ளது. மேலும் பயணச் சீட்டு விற்பனை ஊழியர்களின் பணியிடங்களையும் இம்முறை ஒழித்துக் கட்டுகிறது. பொது மக்கள்  பயணச் சீட்டு சேவையாளர்கள் நியமனம், ரயில்வே பயணச்சீட்டுகள் விற்பனையை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டமாகும். இதை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு டி.மனோகரன் தெரிவித்துள்ளார்.