tamilnadu

மன்னார்குடி அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் உருக்குலைவு

மன்னார்குடி, ஜூன் 5 திருவாரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மன்னார்குடியில் புறநோயாளி கள் மருந்தகம் அமைந்துள்ள பிரிவு கட்டிட மேல் தளம் உருக்குலையத் துவங்கியதால் மக்கள் ஊழியர்கள் பாதுகாப்பாக உடனே அப்புறப்படுத்தப்பட்டனர். புதன்கிழமை காலை, இப்பகுதி கட்டிடத்தில் திடீரென சத்தத்துடன் புற நோயாளிகள் பிரிவு மருந்தக பிரிவுகள் இருந்த கட்டிடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசலும் கம்பி கிராதிகள் வளையவும் தொடங்கின. மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார் உடனே வந்து மக்களையும் ஊழியர்களையும் அப்புறப்படுத்தினார். இதுகுறித்து பொதுப் பணித்துறையின் மருத்துவமனை கட்டிட பராமரிப்பு பொறியாளருக்கும், உதவி கோட்ட பொறியாளருக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் மன்னார்குடி நிலையத்திற்கும், மருத்துவப் பணிகள் இணை இயக்குநருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர்   விரைந்து வந்தனர். மருந்தக மருந்துகள், அறுவை சிகிச்சை கருவிகள், கணினிகள் அப்புறப்படுத்தப்பட்டன. மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வி.கார்த்திக், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.உமா மற்றும் பொதுப்பணித்துறை மருத்துவமனை கட்டிட பராமரிப்பு பிரிவு பொறியாளர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

சிபிஎம் சந்திப்பு
சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.உமாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் சந்தித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார் உடனிருந்தார். 27.11.2018 அன்று சிபிஎம் நகரக்குழு சார்பில் இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கோரிக்கை மனு நேரிடையாக அளிக்கப்பட்டதை எஸ்.ஆறுமுகம் நினைவூட்டினார். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார் கூறுகையில், ஏற்கனவே இந்தாண்டு ஜனவரி மாதம் இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்திற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதன் பேரில் சென்ற மாதம் இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் இயக்குநருக்கும் புதிய கட்டிடத்திற்கான பரிந்துரையை அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். உருக்குலைந்து வரும் பழைய கட்டிடத்தை தாமதமின்றி இடிப்பதற்கு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.