அமேசான் குடோனில் கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே துரைநல்லூர் பகுதியில் அமேசான் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இங்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் முத்து பொருட்களை சரிபார்த்த போது விலையுயர்ந்த செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாயாகும். செல்போன்களை திருடியதாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேர் மீது ஆரணி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.
சிஆர்பிஎப் 30 வீரர்களுக்கு தொற்று
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படை போலீஸ் 77-வது பட்டாலியன் உள்ளது. இங்குள்ள வீரர்களில் 47 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘கறுப்பர் கூட்டம்’ அலுவலகத்திற்கு சீல்
கந்த சஷ்டி கவசம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
மாணவர்களுக்கு உதவி
புதுச்சேரியில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, 250 ரூபாயும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, 330 ரூபாயும், மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
100 விழுக்காடு தேர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் தொகரப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் 100 விடுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தொழில் கடன்
புலம் பெயர்ந்து திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மாடு பலி
வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காளை மாடுகள் மீது சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாட்டின் உரிமையாளர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்பு
புதுச்சேரியிலும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து ஓசூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பார்த்தகுமார் (26) என்ற வாலிபர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாகலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொங்கன் தெருவில் வசிக்கும் கணேசன் மகன் தமிழ்செல்வன் (17) 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பர்கூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இயற்கை மருத்துவ சிகிச்சை
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி, இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.