tamilnadu

img

தலித் ஊராட்சித் தலைவரை தேசியக் கொடி ஏற்றவிடாமல் சாதி ஆதிக்கச் சக்தியினர் அராஜகம் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஆக. 16 - கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவரை, தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுத்த சாதி ஆதிக்க சக்தியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு தலித் மக்கள் சுமார் ஆயிரம் பேர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊராட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொது தொகுதியாகவே இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது,   தலித் பெண் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு தலித் வகுப்பை சேர்ந்த அமிர்தம் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆத்துப் பாக்கம் ஊராட்சியில் முதல் முறையாக, ஒரு தலித் பெண் தலைவராக பொறுப்பு வகிப்பதை சாதி ஆதிக்க சக்தியினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத னால், அமிர்தத்தை, சாதி ஆதிக்க சக்திகள் நிர்வாக பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து வந்தனர். ஊராட்சி தலைவர் நாற்காலியில் அமரக் கூடாது. நூறு நாள் வேலையை பார்வையிட சென்றால் சாதி பெயரை சொல்லி அங்கிருந்து அகற்றுவது, ஊராட்சியின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க மறுப்பது என தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைவரின் சீல் கூட அவர் பார்த்ததில்லை. கிராமசபை கூட்டத்தில் கூட தலை வரை அனுமதிப்பதில்லை. ஊராட்சி செயலர் சசிகுமார் மிரட்டி அமிர்தத்திடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு செல்வார் என்கிறார்கள். ஒட்டுமொத்த நிர்வாகத்தை யும் ஊராட்சி செயலர்தான் நிர்வகித்து வருவதாக கூறு கின்றனர். ஊராட்சி மன்ற கட்டிடத்திலும் தலைவர் பெயரை எழுத அனுமதியில்லை. இப்படி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து சாதி ஆதிக்க சக்தியினர் மிரட்டி வருவதாக கிராம  மக்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த குடியரசு தினத்தன்று கூட தேசிய கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்தை ஏற்றவிடாமல் தடுத்துள்ளனர். ஆதிக்க சாதியை சேர்ந்த கவுன்சிலர் கௌரியின் கணவர் அரிதாஸ் தாஸ் கொடி ஏற்றியுள்ளார். 74-வது சுதந்திர தினத்தன்று (ஆக.15) தேசிய கொடியை  ஏற்றவிடாமல் தடுத்தது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊராட்சித் தலைவருடன் சிபிஎம் சந்திப்பு
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை ஞாயிறன்று (ஆக.16) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினர் ப.லோகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி முனிரத்தினம் ஆகி யோர் நேரில் சென்று விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பெண் தலைவர் அமிர்தத்தை எந்த பணியும் செய்யவிடாமல் தடுத்து, தீண்டாமை கொடுமைக்கு உட்படுத்தி வரும் ஊராட்சி செயலர் சசிகுமாரை பணி  நீக்கம் செய்ய வேண்டும், கவுன்சிலர் கௌரியின் கணவர் அரிதாஸ் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தலைவருக்கு நிர்வாகத்தில் முழு அதிகாரம் வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.