tamilnadu

img

சுடுகாட்டுப் பாதையை மறித்து சுற்றுச்சுவர் சடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மார்ச் 2-  கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலையில் சுடுகாட்டுப் பாதையில் சுற்றுச்சுவர்அமைக்கப்பட்டுள்ளதால் இறந்த நபரின் உடலை கொண்டு செல்ல முடியாமல் சுடுகாட்டிற்கு எதிரே சாலையில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலையில் இருளர் குடியிருப்பு பகுதியை ஒட்டி அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுப் பகுதியை ஒட்டி உள்ள இடத்தை ஒருவர் வாங்கியுள்ளதாகவும், அவர் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் பஞ்சமி நிலத்தில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் யாராவது இறந்தால் அவர்களது சடலத்தை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக பூவலை பகுதி மக்கள் கடந்த 2 வருட காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தும் சுற்றுச்சுவர் அகற்றப்படவில்லை. இந்நிலையில் பூவலை இருளர் காலனி பகுதியை சேர்ந்த முத்தியால் (53) என்பவர் ஞாயிறன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்த நிலையில் சுடுகாட்டை மறித்து உள்ள சுற்றுச்சுவர் அவர்களுக்கு தடையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த சுற்றுச்சுவரை இடிக்க திட்டமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். தொடர்ந்து பூவலை மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஜெ.அருள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைச் செல்வி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேற்கண்ட சுற்றுச்சுவரை இடிக்காமல் மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்து தருவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.  காலைக்குள், சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தராவிட்டால் பொதுமக்களே சேர்ந்த சுற்றுச்சுவரை உடைத்து முத்தியாலின் சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்வோம் எனக் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திங்களன்று (மார்ச் 2) அசம்பாவிதம் நடக்காமல் இருக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் கோட்டாட்சியர் பெருமாள், வட்டாட்சியர் செந்தாமரைசெல்வி உள்ளிட்ட வருவாய் துறையிரும் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து சுற்றுசுவரை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் முத்தியாலின் சடலம் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.