திருவண்ணாமலை, ஜுன் 7- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வடகசாத்து பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் வழங்கபட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்துளை குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் கொண்டு வருகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆரணி - தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக ஆழ்துளை குழாயை சரி செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.