தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து, பல மாணவிகள் உயிரைக் காவு வாங்கி வரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வலியுறுத்தி திருப்பூரில் வாலிபர், மாணவர்கள் கோபாவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் தையல் தொழிலாளர்களான செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ. இவர் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மன விரக்தி அடைந்து புதன்கிழமை மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக, ரிதுஸ்ரீ உள்பட மூன்று மாணவிகள் தற்கொலை செய்து உயிர் நீத்தனர். கடந்த மூன்றாண்டு காலமாக நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு கிடைக்காமல், தங்கள் எதிர்காலக் கனவு தகர்ந்து போனதாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.
பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பத்து மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவைத் தகர்த்து வருவதுடன், பலரது உயிரிழப்புக்கும் காரணமான நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தக் கூடாது, தமிழகத்துக்கு இத்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து திருப்பூரில் வெள்ளியன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் முகிலன், மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது உள்பட இரு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.
முன்னதாக வாலிபர் சங்க மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக வளாகம் முழுவதும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பல்லடம் சாலையில் வாகனங்களை மறித்து வாலிபர், மாணவர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டதுடன், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோபாவேச முழக்கம் எழுப்பினர். இதையடுத்து உதவி ஆணையர் ஜெ.நவீன்குமார் தலைமையில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதாக அறிவித்து வாகனத்தில் ஏறும்படி கூறினர். ஆனால் சாலையில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டகாரர்கள் தொடர்ந்து நீட் தேர்வில் விலக்கு கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென காவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்திற்குள் தள்ளினர். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டோர் சங்கிலிப் பிணைப்பாக ஒருவரோடு ஒருவர் கை கோர்த்துக் கொண்டு தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை பிடித்து இழுத்து தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அப்போது சில காவலர்கள் மறியலில் ஈடுபட்டோரைத் தாக்கி வானக்திற்குள் தள்ளினர். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த வாலிபர் சங்க நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் சமரசம் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் வாகனத்தில் தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வாலிபர் சங்கத்தினரை பார்ப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் அங்கு சென்றார். ஆனால் அவரை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர். மறியலில் பங்கேற்றவர்களைத் தண்டனை கைதிகள், குற்றவாளிகளைப் போல பாவித்து காவல் துறையினர் செயல்படுவதற்கும் வாலிபர் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.