tamilnadu

இணையத்தில் ஆபாச படங்களை வெளியிடுவேன் என மிரட்டியவர் கைது

திருப்பூர், மே 4- தன்னை திருமணம் செய்யாவிட்டால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபாளையம் அருகே சக்தி நாராயணன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த நிறுவனத்திலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் அவர் வேலையை விட்டு நின்ற பிறகும் சக்தி நாராயணன் அந்த பெண்ணிற்கு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் நிறுவனத்தில் வேலை பார்த்த போது செல்போனில் எடுத்து வைத்து இருந்த புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதனால் மன உளைச்சலுக்குள்ளான அந்த இளம்பெண் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறையினர் சக்தி நாராயணனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணை, சக்திநாராயணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது தெரிந்ததும் அந்த பெண் நிறுவனத்திற்கு வேலை செல்வதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சக்திநாராயணன் அந்த பெண்ணை மிரட்டியது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

;