tamilnadu

img

கொரோனா ஊரடங்கில் உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதி விவசாயிகள் எதிர்ப்பால் அனுமதியை ரத்து செய்த ஆட்சியர்

திருப்பூர், ஏப். 21 –

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார்.

இந்த விபரம் தெரியவந்து சமூக ஊடகங்களில் விவசாயிகளின் கடும் கோபமும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு அளித்த அனுமதியை சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ரத்து செய்தார்.

ராய்கர் – புகளூர் இடையே 800 கிலோவாட் உயர் அழுத்த மின் தொடர் பாதை, புகளூர் – அரசூர் இடையே 400 கிலோவாட் உயர் அழுத்த மின் தொடர் பாதை மற்றும் 320 கிலோவாட் திருச்சூர் உயர் அழுத்த மின்தொடர் பாதை அமைப்பதற்கு பவர்கிரிட் கார்ப்ரேஷன் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் மேற்படி உயர் அழுத்த மின் தொடர் பாதைகள் கட்டுமானப் பணிக்கு தாராபுரம், பல்லடம் மற்றும் காங்கயம் வட்டங்களில் நிலுவைப் பணிகளைத் தொடர்வதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கடந்த 16ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இப்பணியை செய்யும் நிறுவனப் பணியாளர்களுக்கு உரிய சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும், உரிய சமூக விலகலைக் கடைப்பிடித்திட வேண்டும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பவர்கிரிட் நிறுவனம் உயர் மின்கோபுர பணி செய்வதற்கு அனுமதி அளித்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆட்சியர் அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொண்டு பவர்கிரிட் நிறுவனத்தினர் மேற்கண்ட பகுதிகளில் பணி செய்வதற்கு ஒரு டிராக்டர் வாகனத்தில் ஏராளமான பிற மாநிலத் தொழிலாளர்களை அழைத்து வந்திருந்தனர். இந்த விபரம் கிராமப்புற விவசாயிகளுக்குத் தெரியவந்ததும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர்.

இது குறித்து புகைப்படங்களுடன் வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததற்கு உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இந்த உத்தரவுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், மாவட்ட நிர்வாகம் எதிர்ப்புக்குப் பணிந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை இப்பணியை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தார். இதில் பவர்கிரிட் நிறுவனம் மேற்கொள்ளும் கட்டுமானப் பணியில் உரிய சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது எனத் தெரியவருவதால் அனுமதி வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள ஊரடங்குக் காலம் முடியும் வரை எவ்வித பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை எனக் காரணம் காட்டி இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம் கோவை மாவட்டத்தைப் போல் திருப்பூர் மாவட்டத்திலும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அதற்காகத்தான் பலகட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு  முடிந்தாலும், விவசாயிகளுக்கு நியாயமான உரிய இழப்பீடு கிடைக்காமல் மேற்படி உயர் மின்கோபுர பணியை செயல்படுத்தக் கூடாது. மீறி உயர் மின்கோபுர பணி தொடருமானால் விவசாயிகளின் போராட்டமும் தொடரும் என்று கூறினர்.