tamilnadu

img

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் மழை - வாழை மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து சேதம்


அவிநாசி, ஏப்.26-
அவிநாசி மற்றும் சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

அவிநாசி வட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்தது. இச்சூழலில் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் சனியன்று மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், கானூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன் பாளையம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ராமியம்பாளையம், அவினாய்புதூர், தண்டுக்காரன்பாளையம், தாளக்கரை, முறியாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக குழை தள்ளிய நிலையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. மேலும் , ராமியம்பாளையம் பகுதியில் இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதேபோல் பந்தம்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்த பழமையான ஈச்சமரம் வேறுடன் சாய்ந்தது. இதுபோல பல்வேறு  இடங்களில் சாலையோர மரங்கள் வேறுடன் சாய்ந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சேவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரியத்தினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு, மின் விநியோகித்தை சீரமைத்தனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால், வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது  விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வாழை மரம் சேதம் குறித்து வருவாய், வேளாண்மைத் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.