திருப்பூர், மே 28 -அவிநாசி அருகே அரசுப் பள்ளியில் தலித் சமையலர் மீது வன்கொடுமை செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாதாடுவதற்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையலர் பாப்பாள் (42) என்பவரை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியதுடன் அவர் அங்கு சமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீது சேவூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஏ.பாண்டியனை நியமிக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் பாப்பாளின் கணவர் பழனிசாமி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ச.நந்தகோபால், பவுத்தன் உள்ளிட்டோர் செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்தனர்.இதில் கூறியிருப்பதாவது: அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை ஒரு கேடா என கேள்வி எழுப்பியது தொடர்பான வழக்கில் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணையை முடித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்த்தில் வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.இவ்வழக்கில் பாப்பாள் சார்பில் வாதாட அரசு சிறப்பு வழக்கறிஞராக வழக்கறிஞர் ஏ.பாண்டியனை நியமனம் செய்யக் கோரி கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மனு கொடுத்தேன். என்னுடைய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வரும் 12ஆம் தேதி முதல்கட்ட விசாரணைக்கு வரச்சொல்லி மாவட்ட முதன்மை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு சம்மன் வழங்கி இருக்கிறது. ஆகவே என் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.