tamilnadu

பிரதமர் கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவி நிதி கிடைக்கவில்லை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்


திருப்பூர், ஏப். 19 –
பிஎம் கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவி நிதி கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளது.
விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் ஞாயிறன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பையடுத்து மத்திய அரசாங்கம் பிஎம் - கிஷான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ரூ.2ஆயிரம் முன்கூட்டியே அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நமது மாவட்டத்தில் பல விவசாயிகளுக்கு நிதி வரவாகி உள்ளது. ஆயினும் ஒரு சில விவசாயிகளுக்கு இன்னும் இந்த நிதி வரவில்லை. ஆகவே இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் இந்த நிதியுதவி வந்து சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இம்மாவட்டத்தில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சிறு குறு விவசாயிகளும்,  விவசாய தொழிலாளர்களும் பதிவு செய்து உள்ளார்கள். கொரோனா நீடித்த ஊரடங்கு பாதிப்பையடுத்து,  சிறு, குறு விவசாயிகள் உற்பத்திப் பொருளுக்கு விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாய தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையை கணக்கில் கொண்டு சிறு, குறு விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்கள்களுக்கும் 'முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய வேலைகளுக்கும், காய்கறிகள் அறுவடை செய்யும் பணிக்கும்  தேசிய ஊரக வேலைத் திட்ட பணியாளர்களை பயன்படுத்திட உரிய வழிகாட்டுதலை உருவாக்கவும்  கேட்டுக் கொண்டுள்ளனர்.