tamilnadu

திருப்பூரில் உணவுப் பாதுகாப்பு சட்டம் அமலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருப்பூர், ஜூன் 6-திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கம் மற்றும் குறைதீர் உள்ளமைப்பு முறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் ஆர்.வாசுகி தலைமையில், மாவட்டஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு அரிசி வழங்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும்  தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்ட அமலாக்கம் மற்றும் குறைதீர் உள் அமைப்பு முறையின் செயல்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கு நியாயவிலை பொருட்களை தங்குதடையின்றி வழங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக அவினாசி வட்டத்தில் பழங்கரை, திருப்பூர் வடக்கு வட்டத்தில் காமாட்சியம்மன் வீதி, அம்பேத்கார் நகர் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டத்தில் கருவம்பாளையம்-ஐஐ ஆகிய நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.இந்நிகழ்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் குடிமைப்பொருள்  குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.