தாராபுரம், மே 26 -தாராபுரத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5மேல்நிலைத்தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அமராவதி அணையின்நீர்மட்டம் தற்போது மிகவும் குறைந்துள்ளதால் அணையிலிருந்து குடிநீருக்காக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் தாராபுரம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகளிலிருந்து சுமார் 15 லட்சம் லிட்டர்தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. மேலும், காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் ஒப்பந்தபடி தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தினசரி 40 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் தரவேண்டும். ஆனால் கொடுமுடியிலிருந்து முத்துர், மேட்டுக்கடை, வெள்ளகோவில், மூலனுர் என பல பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு கடைமடை பகுதியாக தாராபுரத்திற்கு வருகிறது. இச்சூழலில், காவிரி கூட்டுகுடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இத்திட்டப்பணிகளுக்காக போடப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் விரயமாகிறது. குடிநீர் பிரிவில்இருந்து களப்பணியாளர்கள் கொடுமுடி வரை சென்று முகாமிட்டு உடைப்புகள் சரிசெய்யப்பட்ட பிறகே தாராபுரத்திற்கு இரண்டு, முன்று நாட்கள் கழித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தாராபுரத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, குடிநீர் விநியோக பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.