tamilnadu

img

தோழர் என்.ஆறுமுகம் நினைவு நாள் கடைப்பிடிப்பு

திருப்பூர், மே 30 -திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவராக செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற தோழர் என்.ஆறுமுகத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் மே 30ஆம் தேதி உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் அவிநாசி சாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகம் முன்பாக என்.ஆறுமுகத்தின் உருவப்படம் மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தோழர் என்.ஆறுமுகத்தின் சிறப்புகளை நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர, ஒன்றியக்குழுக்கள் சார்பில் பேருந்து நிலையம் அருகே மரக்கடை சந்தில் உள்ள பி.ஆர்.நிலையத்தில் தோழர் என்.ஆறுமுகம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சுமைப்பணி தொழிலாளர் சங்கம்
திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அரிசிக்கடை வீதி, ரயில்வே கூட்செட் தொழிலாளர் சங்கம் மற்றும் தென்னம்பாளையம் சந்தைபேட்டை ஆகிய பகுதிகளில் என்.ஆறுமுகம் படத்துக்கு மலர் மாலை சூட்டி மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால், மாவட்டத் தலைவர் சதாசிவம், ரயில்வே கூட்செட் சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, கனகராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு என்.ஆறுமுகத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.