tamilnadu

img

போராடாவிட்டால் மனிதனாக வாழமுடியாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பேச்சு

தாராபுரம், மே 2 -தாராபுரத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில், நாம் போராடாவிட்டால் மனிதனாக வாழமுடியாது. பிரச்சினைகளுக்கு எதிராக போராட மே தின நாளில் சபதமேற்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசினார்.மேலும் அவர் பேசுகையில்,உலகம் முழுவதும் 184 நாடுகளில் உள்ள தொழிலாளர்களும், ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களும் இணைந்து சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு மிகச்சிறப்பாக கொண்டக்கூடிய நிகழ்ச்சிதான் மே தினமாகும். மே தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாடுகிறோம் என்றால் 140 வருடங்களுக்கு முன்னால் தொழிலாளர்களின் வேலை நேரம் 20 மணிநேரம் என்று இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளி வர்க்கம் போராட ஆரம்பித்தது. இப்போராட்டம் அமெரிக்காவின் முக்கிய நகரமான சிக்காக்கோ நகரில் நடைபெற்றது. போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கும், தடியடிக்கும் இரையானார்கள். இந்த போராட்டத்தின் விளைவாக 1886ஆம் ஆண்டு அரசாங்கங்கள் 8 மணிநேர வேலை என்பதை ஏற்றுக்கொண்டார்கள். 133 ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக தொழிலாளிக்கு 8 மணிநேரம் வேலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் தஞ்சை பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை நேரம் என்பது பொழுது விடிகிறபொழுது கழனியில் இறங்கி வேலையை ஆரம்பித்து, இரவில் தான் கழனியைவிட்டு வெளியேற வேண்டும். இந்த உழைப்பிற்கு சொற்ப கூலி மட்டுமே நிலச்சுவான்தார்கள் கொடுத்தனர். விவசாய தொழிலாளி சுகவீனத்தால் வேலைக்கு செல்லவில்லை என்றால் சாணிப்பால் ஊற்றுவார்கள். அது ஜீரணமாகமல் அந்த விவசாயத் தொழிலாளி வயிறு உப்பி இறந்துவிடுவார். பெண் தொழிலாளிக்கு சவுக்கடி கொடுக்கப்படும். இந்நிலையில் தான் செங்கொடி இயக்கத்தின் கீழ் திரண்ட விவசாய தொழிலாளிகள் சாணிப்பால் ஊற்றாதே, சவுக்கடி கொடுக்காதே என்று கோரிக்கைகளை முன்வைத்து போராடி வெற்றிபெற்றார்கள்.

அதன்பின்கால்படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக வெண்மணியில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து பண்ணையார்களின் அடியாள்கள் தீ வைத்து கொளுத்தினர். இதில் 44 பேர் தீயில் கருகி இறந்தனர். அதற்கு காரணமானவர்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டார்கள். இந்த அடித்தட்டு மக்களுக்காகத்தான் செங்கொடி இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.மாமேதை லெனின் கூறுகிறார் அரசியலில் நாம் தலையிடாவிட்டால், அரசியல் நம் வாழ்வில் தலையிடும். இக்கருத்தை எத்தனை பேர் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள் என்று தெரியாது. இன்றைய காலக்கட்டத்தில் நாம் போராடாவிட்டால் மனிதனாக வாழ முடியாது. ஒரு பகுதி பொதுமக்கள் எவன் ஆண்டால் என்ன எனக்கு என்ன வரப்போகிறது என்ற எண்ணத்தில் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கொள்ளையடிக்கப்போகிறார்கள். நமக்கு என்ன வரப்போகிறது என பார்வையாளராக மட்டுமே உள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசின் கையில் இருந்தவரை சிறிதளவு ஏறியது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களின் கைகளுக்கு சென்ற பிறகு பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதே போல கேபிள் கட்டணம் ரூபாய் 100ல் இருந்தன. பின்னர் செட்டாப் பாக்ஸ் கொடுத்து ரூ.150 வசூலிக்கப்பட்டன. தற்போது ரூ.400 இருந்தால்தான் விரும்பிய சேனல்களை பார்க்கமுடியும் என்ற நிலையை உருவாகிவிட்டார்கள். அடுத்தாக மின்சாரத்திற்கு பிரிபெய்டு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் குடிநீர் விநியோகம் சூயஸ் என்னும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. நம்மை ஆளக்கூடியவர்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள் என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இதனால் தஞ்சை டெல்டா பகுதி தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளை நிலங்களை விற்றுவிடுவார்கள். அதிலிருந்து மீத்தேன் உள்ளிட்ட வாயுக்கள் எடுக்கலாம் என்பதே மத்திய அரசின் எண்ணம்.ஆகவே நாம் நம்மை சுற்றி நடக்கின்ற பிரச்சினைகளை வேடிக்கை பார்த்து கொண்டு எதிர்ப்பு குரல் கொடுக்காமல் இருந்தால் இந்த சமூகத்தில் நாம் வாழமுடியாது. கொடுமைகள் நடக்கிறபோது எதிர்த்து போராட வேண்டும். 6 மாத கைக்குழந்தை கூட தனக்கு பசித்தால் அழுதால்தான் பால் கிடைக்கும் என்கிறபோது, பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சென்றால் நமக்கு விடிவு என்பது கிடையாது. எனவே இந்த கொடுமைகளுக்கு எதிராக போராடவேண்டும். இந்தியாவில் எல்லா வளமும் உள்ளது. நீர்வளமும், நிலவளமும், மனித வளமும் கொண்ட செல்வம் மிகுந்த நாட்டில் ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த செல்வங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி பயன்படுத்தினால் இந்த தேசம் உலக மக்களுக்கே உணவு அளிக்கமுடியும். ஆனால் இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவு உணவு இன்றி உறங்கும் அவலநிலை உள்ளது. நம்முடைய செல்வங்கள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சேவகம் செய்கிற அரசாக மத்திய அரசு உள்ளது. எனவே இதற்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்டு மதம், மொழி, இனத்தை கடந்து தேசத்தின் நலனுக்காக போராட மே தின நாளில் சபதம் ஏற்கவேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார். நிறைவாக சண்முகம் நன்றி தெரிவித்தார்.முன்னதாக தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் காலையில் செங்கொடி ஏற்றப்பட்டது. மாலையில் பேரணி நடைபெற்றது.உடுமலைரோடு, பெரியகடைவீதி வழியாக அண்ணாசிலை முன்பு நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கி.மேகவர்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகிகள் என்.கனகராஜ், ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுசாமி, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.