tamilnadu

அவிநாசி: அதிமுக கோட்டையை தகர்த்த திமுக கூட்டணி

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,65,967 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,30,581 ஆண் வாக்களர்களும், 1,35, 364 பெண் வாக்களர்களும், 22 இதர வாக்காளர்களும் உள்ளனர். இதில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவில் ஆண்கள் 99,758 பேர், பெண்கள் 99,049 பேர் என மொத்தம்1,98,808 வாக்குகள் பதிவானது. அவிநாசி சட்டமன்ற தொகுதியானது கடந்த காலங்களில் அதிமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதியாக கருதப்பட்டு வந்தது. இங்கு தொடர்ச்சியாக அதிமுகவைச் சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக, தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழக சட்ட பேரவையின் சபாநாயகரான எஸ். தனபால் ஆவார். ஆகவே, இம்முறை நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜனுக்கு, அவிநாசி சட்டமன்ற தொகுதி பெருவாரியாக வாக்குகளை அள்ளித்தரும் என அதிமுகவினர் எண்ணியிருந்தனர். அதுவும், நீலகிரி தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எம்.தியாகராஜன் அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் என்பது அதிமுகவிற்கு பலமாக கருதப்பட்டது.  மேலும், இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை பிரதானமாக கோரிக்கையாக இருந்து வந்த அவிநாசி- அத்திக்கடவு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி சென்றார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மத்தியிலும் பெரும் ஆதரவு கிடைக்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்தார்கள். இதுமட்டுமின்றி அவிநாசி-அத்திக்கடவு போராட்ட குழுவின் ஆதரவை அதிமுகவினர் நாடினார்.

இதன்மூலம் திருப்பூர், அவிநாசியை உள்ளடக்கிய நீலகிரி ஆகிய இரு  தொகுதிகளிலும்அத்திக்கடவு போராட்டக் குழுவினர், அவர்களின் ஆதரவாளர்கள், விவசாயிகளின் வாக்குகள் தங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர்.ஆனால், இதற்கு மாறாக அவிநாசி - அத்திக்கடவு போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒரு பிரிவினர் மட்டும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், இத்திட்டத்திற்காக பல ஆண்டுகளாக போராடி வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் அதிமுகவினருக்கு ஆதரவளிப்பளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதனால் நீண்ட காலமாக ஒற்றுமையாக இருந்த வந்த அவிநாசி- அத்திக்கடவு போராட்டக் குழுவினர் இடையே பிளவு ஏற்பட்டது.இச்சூழலில்தான், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவை காட்டிலும், திமுகவின் சார்பில் நீலகிரி தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 17 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் அதிமுகவை தோற்கடித்தார். கடந்த காலங்களில் அதிமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதியாகவும், கோட்டையாகவும் கருதப்பட்டு வந்த அவிநாசியை தற்போது திமுக வேட்பாளர் அ.ராசா தகர்த்துள்ளார். இந்த வாக்கு வித்தியாசம் அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் இந்த சரிவிற்கு பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும் பிரதான காரணமாக மக்கள் மத்தியில் பேசப்படுவது, கடந்த முறை  நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதியில் எவ்வித திட்ட பணிகளையும் செயல்படுத்தாததுடன், வெற்றி பெற்ற பின்னர் நன்றி அறிவிப்பு கூட வந்ததில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல், நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  இந்ததொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான தனபால் ஆகிய இருவரும் சேர்ந்து அவசரகதியில் அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதற்கும் இத்திட்டத்தால் பயன்படக்கூடிய ஆறுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் அவிநாசியில் வந்தே அடிக்கல் நாட்டினார்.இத்திட்டத்தை செயல்படுத்தினால் நீலகிரி தொகுதியில் வெற்றி பெறலாம் என உளவுத்துறை அளித்த அறிக்கையின்படியே இந்த அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால், தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சியினரும், தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டமானது அத்திக்கடவு திட்டம் அல்ல என்றும், காலிங்கராயன் குளம் திட்டம் என்றும் பல்வேறு விவரங்களை மேற்கொள் காட்டி விவரித்தனர். இவையனைத்தும் மக்கள் எளிதாக புரிந்து கொண்டதால் வழக்கமாக அதிமுகவிற்கு வாக்களிக்கும், அப்பகுதி விவசாயிகள் கூட தங்களை ஏமாற்ற நினைக்கும் தமிழக அரசிற்கு பாடம் புகட்டும் வகையிலேயே தற்போது திமுக வேட்பாளருக்கு தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். இதன்காரணமாக சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் அவிநாசி தொகுதியில் கடந்த தேர்தலை விட 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இது எதிர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.(ந.நி)