திருப்பூர், நவ. 24 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொள்ளாச்சி சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 25 நாட் களுக்கு மேலாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் கூறினர். குடிநீரின்றி தவித்ததுடன், வடுகபாளையம் புதூர் கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் கூறினர். இந்நிலையில் சனியன்று சின்னூர் பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற் பட்டோர் கோபாவேசத்துடன் பல்லடம் - பொள்ளாச்சி சாலை சின்னூர் பிரிவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டொரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.