மழையால் கொடுமுடியாறு நீர்த்தேக்கம் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி, ஆக.12-நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொடுமுடியாறு நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவான 53 அடியை எட்டியுள்ளது.இந்நிலையில், நீர்தேக்கத்தில் இருந்து வள்ளியூரான் கால்வாய், படலையார்குளம் கால்வாய் ஆகியவற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம், ராஜபுதூர், வள்ளியூர், மகிழ்ச்சிபுரம், கள்ளிகுளம், கட்டனேரி, தரிசகுளம், குட்டிகுளம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5780 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்தது: பயணிகள் அதிர்ச்சி
திருநெல்வேலி, ஆக.12-நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து மதியம் ஒரு மணி அளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சுரண்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சுரண்டைக்கு முன்னதாக உள்ள குலையநேரி குளம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் எதிர்பாராதவிதமாக பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பக்கவாட்டில் தொங்கியது. இதை அறிந்த டிரைவர் பஸ்சை உடனடியாக சாலை ஓரமாக நிறுத்தினார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி சென்று பார்த்தனர். அப்போது பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பக்கவாட்டில் தொங்கியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி, பெயர்ந்த மேற்கூரையை இழுத்து சரிசெய்தனர்.அதன்பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சுரண்டையை நோக்கி சென்றது. அந்த பஸ்சில் பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்தனர்.