tamilnadu

img

நாங்குநேரி தொகுதியில் ஒருவர் மனு தாக்கல்

திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தில் உள்ளநாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. இந்த 2நாட்களில் ஒருவர்மட்டுமே நாங்குனேரியில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதிநடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கியது. வேட்புமனு துவங்கிய திங்களன்று முதல் நாளில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆனால் 10 பேர் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றனர்.  தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலரான நடேசன், உதவி தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான ரஹ்மத் துல்லா ஆகியோரிடம் வேட்புமனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதான கட்சிகள் சார்பில் யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் 2-வது நாளான  செவ்வாயன்று  தேர்தல் மன்னன் என்று அறியப்ப்படும் சேலம் மாவட்டம் மேட்டூர் வீரக்கால் புதூரை சேர்ந்த பத்மராஜன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தேர்தல் அலுவலரான நடேசனிடம் வேட்புமனுவை வழங்கினார். ஹோமியோபதி மருத்துவரான இவர் இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் மனு தாக்கல் செய்து போட்டியிட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இந்நிலையில் தற்போது நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடமனு தாக்கல் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கின்னஸ் சாதனையில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் நான் போட்டியிட்டுள்ளேன். நாங்குநேரி இடைத்தேர்தலில் இன்று நான் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். இதன் மூலம் நான் 206-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என கூறினார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய இந்த 2 நாட்களில் பத்மராஜனை தவிர வேறு யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

;