ஆசிரியர் கூட்டணி கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.10- ஜெ.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் குன்வர்சோசுவா வளவன் தலைமை வகித்தார். ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் ஜெகந்நாதன் வாசித்தார். கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு அனுப்புவதை ரத்து செய்து அதற்கு பதில் தகுதியானவர்களை அரசு பணியமர்த்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் பொய்யாமொழி நன்றி கூறினார்.
சங்கப் பேரவைக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.10- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். ஆண்டறிக்கையை மாவட்ட செயலாளர் மோகன் வாசித்தார். வரவு– செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் நடேசன் சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் மதிவாணன், மாநில பொருளாளர் அழகிரிசாமி, மாநில துணைத்தலைவர் பொய்யாமொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மணல் திருட்டு தடுக்க ரோந்து பணி செல்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இ-அடங்கல், பணி கிராமத்தில் குடியிருத்தல், மாவட்ட மாறுதல், கோட்ட மாறுதல் ஆகியவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்க்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட பரப்புரை செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
கூட்டுறவுத் துறை அலுவலர் சங்க கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.10-தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச்சங்கத்தின் மாநில பேரவை கூட்டம், சங்க 16வது ஆண்டுவிழா மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கான முப்பெரும் விழா சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பாலசந்திரன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயல்பாடுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் சேகர் பேசினார். வரவு- செலவு அறிக்கையை மாநில பொருளாளர் சக்ரவர்த்தி சமர்ப்பித்தார். விழாவில் பதிவாளர் அலுவலகத்தில் எஸ்சி, எஸ்டி இன கூடுதல் பதிவாளர், இணை பதிவாளர் மற்றும் துணை பதிவாளர்களை நியமனம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் ஓய்வு பெற்ற கூடுதல் பதிவாளர் ராமலிங்கம், துணை பதிவாளர் அறிவழகன், குமாரசாமி, ராஜன், விவேகானந்தன் ஆகியோரின் பணியை பாராட்டி கௌரவித்தனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் குருசேகர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.