விபத்தில் வாலிபர் பலி
தூத்துக்குடி, மே 25 -தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்வம் பிரசன்னா(30) மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி பைக்கில் துறைமுகம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி, மே 25-நெல்லையிலுள்ள காய்கனி சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான செங்கோட்டை, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, களக்காடு ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். பல்வேறு வகையான மாம்பழங்கள் ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனையாகின்றன. இது தவிர சேலம், தேனி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு விற்பனைக்காக வந்துள்ளன. நீல ரகம் கிலோ ரூ.40-க்கும், இமாம் பசந்த் ரூ.100-க்கும், பஞ்சவர்ணம் ரூ.70-க்கும், சப்பட்டை ரூ.50-க்கும், பாலாமணி ரூ.50-க்கும், பங்கனப்பள்ளி ரூ.80-க்கும் விற்பனையாகின்றன. இது தவிர கிளிமூக்கு எனப்படும் நாட்டு மாம்பழங்கள் கிலோ ரூ.25 முதல் கிடைக்கின்றன. தற்போது மாம்பழ வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
வேன் நிலைதடுமாறி விபத்து இளைஞர் பரிதாப பலி
திருநெல்வேலி, மே 25-தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள அய்யனாரூத்து பகுதியினை சேர்ந்தவர் கொம்பையா(35). கொத்தனாராக பணி செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு வேனில் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது லோயர்டேம் அருகே ஒரு திருப்பத்தில் வேன் திடீரென நிலை தடுமாறியதில் கொம்பையா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் கொம்பையாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வி.கே.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.