தரங்கம்பாடி, மே 21-இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழில் பைபிளைஇயந்திரம் மூலம் காகிதத்தில் அச்சடித்து வெளியிட்ட சீகன்பால்கு வாழ்ந்த தரங்கம்பாடியில் அவரது வீட்டில் கையெழுத்து வேதாகம சாதனை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.‘வேதாகம நண்பன்’ என்கிற அமைப்பு மூலம் மே 21,22இரு தினங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் சுவிசேஷலுத்தரன் திருச்சபையின் முன்னாள் பேராயர் எட்வின் ஜெயக்குமார், புதிய எருசலேம் ஆலய ஆயர் நவராஜ் ஆபிரகாம், புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்சகோதர் கருணா ஜோசாபாத், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சைமன், வேதாகம நண்பன் இயக்குநர் வீரசாமிதாஸ், சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குநர் ஜாஸ்மீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.1706-ல் தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை முதன் முதலில் தமிழ்மொழியில், இயந்திரம் மூலம் காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டதோடு, ஓலைச்சுவடிகளில் இருந்த எண்ணற்ற தமிழ்நூல்களை காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டு தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக, தமிழ்மொழியை உலகறிய செய்ய பாடுபட்டவர்களில் ஒருவராகவிளங்குகிறார்.1715-ல் பைபிளை அச்சடித்து வெளியிட்ட சீகன்பால்கு 1719-ல் தரங்கம்பாடியிலேயே உயிர் நீத்தார். அவர் இறந்து300 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ‘வேதாகம நண்பன்’ என்கிற அமைப்பு 1464 பேரைக் கொண்டு கைகளால் பைபிளை எழுதும் நிகழ்ச்சியை செவ்வாயன்று துவக்கியது. புதனன்றும் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு பைபிளை எழுதி வருகின்றனர்.