முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு
தஞ்சாவூர் ஜூன்.15- கேந்திரிய சைனிக் போர்ட் வாயிலாக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் 20 இடங்களும் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்பில் 3 முதல் 6 இடங்களும் ராணுவத்தினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளில் பணிபுரிந்தவர்களின் சிறார்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர். இணையத்தின் மூலமாக 30.06.2019 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04362- 230104 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பில்லுவெட்டிவிடுதியில் தொடர் கொள்ளை சம்பவம்
தஞ்சாவூர் ஜூன்.15- ஒரத்தநாடு அருகே திருவோணம் பில்லுவெட்டி விடுதி கிராம கோவில் உண்டியலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளையர்கள் உடைத்து கொள்ளையடித்து சென்றனர். இந்தக் கொள்ளை சம்பந்தமாக திருவோணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உண்டியலில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்ததாக விசாரணையில் தெரிந்தது. திருவோணம் பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெறும் மூன்றாவது திருட்டு. இந்த மாதத்தில் இது ஏழாவது கொள்ளை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஆய்வியல் நிறைஞர் படிப்பு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
தஞ்சாவூர் ஜூன்.15- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கவும், ஜூலை 1 ஆம் தேதி வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம்(பொது) ரூ 300, பட்டியல் இனத்தவருக்கு ரூ 150. மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலோ, தொலைபேசி எண் 04362- 226720, 227089 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் ச.முத்துகுமார் தெரிவித்துள்ளார்.
ரத்த கொடையாளர் தின விழா
திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மருத்துவமனை தலைமைசெயல் அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபுமற்றும் மருத்துவகண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமைதாங்கி உரையாற்றினர். நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்குணசீலன் சிறப்புரைஆற்றினார். விழாவில் மருத்துவமனை பணியாளர்கள் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர். ரத்த வங்கி தலைமை மருத்துவர் ஆர்த்தி நன்றி கூறினார்.