tamilnadu

img

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவி பலி

கரூர், நவ.11- கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பசுபதிபாளையம், வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் கோமதி(17) அப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.  இந்நிலையில் வழக்கம் போல் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவி, வகுப்பு துவங்கும் முன்பே மயக்கம் போட்டு பள்ளி வளாகத்தில் கீழே விழுந்தார். அப்போது ஆசிரியர்கள் மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்ததோடு, உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பள்ளி மாணவி கோமதி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோசி வெண்ணிலா ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி கோமதிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் மயக்கமுற்ற அவர் நாடித் துடிப்பு குறைந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் தனது மகளுக்கு எந்தவித நோயும் இல்லை. பள்ளி வளாகத்தில் தான் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என அவரது தாயார் மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகள் விசாரணையின் போது கூறி கதறி அழுதார். மேலும் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள், பெற்றோர், மாணவியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.