tamilnadu

விவசாயிகள் பெயரில் ரூ.300 கோடி கடன் மோசடி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை 

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தார்.  அம்மனுவில், 'தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயத்தை நாசமடைய செய்யும் ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ், மீத்தேன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது.  கடந்த பல ஆண்டுகளாக தூர்வார ப்படாமல் உள்ள கடைமடை பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில், பாசன வாய்க்கால்களை முறையாகவும், முழுமையாகவும் தூர்வார வேண்டும்.  பூதலூர் தாலுகா உய்யக்கொண்டான், கட்டளை கால்வாய் பகுதியில் ஏரிகளில் தண்ணீர் வந்ததால் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை உடனே செயல்படுத்த வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத ஆனந்த காவேரி வாய்க்காலை கச்சமங்கலத்தில் இருந்து முழுமையாக தூர்வார வேண்டும். சாலை அமைக்கும் பணிகளால் வாய்க்காலில் கிடக்கும் மரங்கள், முட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.   கஜா புயல் பேரிழப்பை சந்தித்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகளுக்கு, வேளாண் துறையால் வழங்கப்பட்ட உளுந்து விதை, பயிர் செய்தும், பலன் கிடைக்காமலேயே போய் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி ரூ. 300 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. ஆலை நிர்வாகம், இதற்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வலையில் இருந்து விவசாயிகளை மீட்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.