tamilnadu

திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் முக்கிய செய்திகள்

நெல்லை டவுனில் ரப்பர் கம்பெனியில் ரூ.1.5 லட்சம் கொள்ளை

நாகர்கோவில், மே 5-திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (48). இவர், கன்னியாகுமரி மாவட்டம், தாமரைகுட்டிவிளை பகுதியில் சொந்தமாக ரப்பர் கம்பெனி நடத்திவருகிறார். வழக்கம்போல், சனியன்று பணிகளை முடித்துவிட்டு தனது கம்பெனியை பூட்டி விட்டு சென்றார். மறுநாள்காலையில் கம்பெனியை திறக்க வந்த போது, அங்கு கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்ற போது, ஆங்காங்கே பொருள்கள் சிதறியும், மேஜை டிராயரில் வைத்திருந்த ரூபாய் 1.5 லட்சம் ரொக்கபணமும் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் முருகேசன் கொடுத்துள்ளார்.


இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி

திருநெல்வேலி, மே 5-நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் வேளாண் தொழிலில், அதிக மகசூலுக்காக ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை நாடும் விவசாயிகள் மத்தியில், முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்து நெல்லைமாவட்டத்தை சேர்ந்த விவசாயி அதிகம் மகசூல் ஈட்டி வருகிறார்.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆலங்குளம் கிராமம் உள்ளது. பெரும்பாலும் வறட்சி நிலவும் இப்பகுதியில், குருசாமி என்னும் விவசாயி மட்டும்10 ஏக்கர் பரப்பளவிலான தனது தோட்டத்தை பசுமை குறையாமல் பராமரித்து வருகிறார்.முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஜி.டி.நாயுடு, நம்மாழ்வார் ஆகியோரை பார்த்து இயற்கை விவசாயத்தின் பால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.அதிக மகசூலுக்காகவும், பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் பஞ்சகவ்யம்,தொழு உரம், தழைச்சத்து ஆகியவற்றை மட்டுமே பயன் படுத்தி வருகிறார். ஒவ்வொரு செடியின் அடியிலும், கொட்டிக் கிடக்கும் ஆட்டு எருவும், செடியின் மேல் தழைத்து குலுங்கும் காய்களுமே இதற்கு சாட்சியாக உள்ளது.

;