பெரம்பலூர், ஜூலை 14- தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் நான்குரோட்டில் சனியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளா் சிவா கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இயக்க நிறுவனர் செல்வராஜன், மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் மனோகரன், மாநில சங்க ஆலோசகர் பெருமாள் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சின்னதுரை, விஏஓக்கள் கார்த்திகேயன், அகிலன், குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மலர்கொடி, அமுதா, முருகேசன், கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயலாளர் காசிநாதன் வரவேற்றார். ஊடகபிரிவு செயலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில், சங்க செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கிராம உதவியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வரையறுக்கப்பட்ட டி பிரிவு ஊதியம் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். விஏஓ காலிப் பணியிடம் அதிகளவில் உள்ளதால் பணியில் உள்ள கிராம உதவியாளர்களின் பணி உயர்வுக்கு ஆண்டுக்கு 20 விழுக்காடு என்ற விதியை தளர்த்தி பணியில் உள்ள தகுதியுடைய கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் விஏஓ பணி உயர்வு வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். 2003-க்கு பின் பணியில் சேர்ந்துள்ள அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.