தஞ்சாவூர் செப்.27- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், நெய்வாசல் பஞ்சாயத்து அரசப்பட்டு வடவாற்றின் குறுக்கே குறுகலான பழைய ஊசிக்கண் பாலம் உள்ளது. பழமையான சேதமடைந்த இந்த பாலத்தை இடித்து விட்டு, புதிய அகலமான உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பழைய பாலத்தை இடித்து விட்டு நபார்டு திட்டம் மூலம் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி, முடிவடையாமல் தற்போது வரை கிடப்பில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்ல மாற்று பாலம் அமைக்காததால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அருந்தவபுரம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் போராட்டம் அறிவித்த உடன், வட்டாட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் போராட்ட குழுவினருடன் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இதுவரை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்துவதை கண்டித்தும் உடனடியாக மாற்றுப்பாலம் அமைத்துத்தர பலமுறை வலியுறுத்தியும், கிராம பொதுமக்கள் சார்பில் சாலைமறியல் நெய்வாசல் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என். சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத்தலைவர் ஆர். ரமேஷ், அரசப்பட்டு எஸ்.காத்தலிங்கம், கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசப்பட்டு கே.பாலகிருஷ்ணன், வி.வீரையன், எம்.மோகன், ஆர். ராஜேந்திரன், எஸ்.ஜீவசுந்தரம், பி. செந்தில், எம்.சேகர், சி.திருமேனி, வடக்கு நத்தம் எஸ்.கார்த்திக், அக்கரை நெடுந்தெரு டி.ராஜப்பா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், துரைராஜ், கோவிந்தராஜ், மோகன்தாஸ், ரமேஷ், ஜெய்சங்கர், திமுக அசோக்குமார், வாலிபர் சங்கம் சுயம்புலிங்கம், ரணதேவ், சிவா, சசிகுமார் ஆகியோர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒரத்தநாடு வட்டாட்சியர் அருள்தாஸ், காவல் துணைக் கண்காணிப்பாளர் காமராஜ், காவல்துறை ஆய்வாளர் சுமித்ரா, நபார்டு கிராம சாலைகள் திட்ட உதவி பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் போராட்டக்குழு மற்றும் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக அந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.