திருச்சிராப்பள்ளி, மே 26- திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் செவ்வாயன்று தமிழ்நாடு தட்டச்சு கணினி பள்ளிகள் திருச்சி மாவட்ட சங்க தலைவர் முர்தீன் செரீப், துணைத் தலைவர் சித்தார்த்தன், செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிலகங்கள் ஏறத்தாழ 3500க்கும் மேற்பட்ட தட்டச்சுப் பயில கங்கள் செயல்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் ஏறக்குறைய 300 பயிலகங்கள் உள்ளன. தற்பொழுது ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டு முடங்கிக் கிடக்கிறோம். அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே தட்டச்சுப் பயிலகங்களுக்கு தளர்வு அளித்தால் அரசு நெறிமுறைகளின்படி செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.