புதுக்கோட்டை, ஜூன்.1- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மண்டல சிறப்புப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவர் பி.லோகநாதன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஏ.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் எஸ்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார். முன்னதாக உதவித் தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்க, மண்டலப் பொருளாளர் எம்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தகால பணப்பலன் உயர்வுகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான ஓய்வூதியர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.