திருச்சிராப்பள்ளி, மே 29-ஆர்.கே.டி. பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர் கென்னடி ஜோசப். இவர் பணியின் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். இவரது மருத்துவ செலவிற்கு கூட ஆர்.கே.டி நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. இதனை கண்டித்தும், பணியின் போது கால்களை இழந்த கென்னடி ஜோசப்பிற்கு அந்நிறுவனம் இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கவேண்டும். தமிழக முதல்வர் அரசுநிவாரண நிதியாக ரூ. 5 லட்சம்வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் 3 சக்கர வாகனம் மற்றும் பெட்டிக்கடை வைப்பதற்கான இடம் ஒதுக்கித் தர வேண்டும். ஊனமுற்றோர்கான பென்சன் தொகை ரூ.1500 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். தனியார் பேருந்து ஓட்டுநர் சங்க தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் வீரமுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின், துப்புரவுதொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.விபத்தில் கால்களை இழந்த கென்னடி ஜோசப் குடும்பத்தினர் உள்பட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். பின்னர் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சிவராசு முதல்வர் நிவாரண நிதிக்கு உடனடியாக பரிந்துரை செய்வது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மருத்துவ செலவு குறித்துபேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.