உழைக்கும் பெண்களின் சிறை நிரப்பும் போராட்டம்
கரூர், மார்ச் 6- உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம், முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்களின் நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உழைக்கும் பெண்கள் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம், கரூர் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரத்தினமாலா தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஊரக வளர்ச்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கா.கந்தசாமி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.செல்வராணி, சங்க நிர்வாகிகள் வாசுகி, பொன்மணி, செல்வி, மு.நிர்மலா, கந்தசாமி, ப.சரவணன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி, மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கே.கல்யாணி தலைமை வகித்தார். பேரணியை சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் துவக்கி வைத்தார். பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, மாதர் சங்க மாநகர செயலாளர் இ.வசந்தி, சிஐடியு மாநகர துணை செயலாளர் அன்பு, பி.என்.பெயர்நீதி ஆழ்வார், இடிஎஸ் மூர்த்தி, எஸ்.மில்லர் பிரபு, தையல் தொழிலாளர் சங்க தலைவர் வனரோஜா, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் நாகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கே.அபிமன்னன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு பொது தொழிலாளர் சங்க(சிஐடியு) திருச்சி மாவட்டக்குழு சார்பில் காந்தி மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் செல்வி தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி எலிசபெத்ராணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, சிஐடியு மாவட்டத் தலைவர் ராமர், பொருளாளர் வி,கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஜெயபால், புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், வீரமுத்து, அங்கன்வாடி தமிழ்செல்வி, சித்ரா, மின்அரங்கம் மணிமேகலை, தையல் பிரமிளா, கட்டுமானம் கல்யாணி, மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க ராமச்சந்திரன் மற்றும் 63 பெண்கள் உள்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக காந்தி மார்க்கெட் வளைவில் இருந்து பேரணியாக புறப்பட்டு பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் காவலர்களுக்கும், பேரணியில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவலர்கள் உடனே கைது செய்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி தலைமை வகித்தார். தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் க.சிவக்குமார், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் சி.அன்புமணவாளன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் பேசினர்.