திருச்சிராப்பள்ளி, ஆக,25- மத்திய அரசின் முத்தலாக் சட்டம். யு.ஏ.பி.ஏ சட்டம், காஷ்மீர் மறு நிர்ணய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், திருச்சி பெட்டவாய்தலையில் முஸ்லிம்கள் பொதுமையவாடியை சீர் செய்து கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஞாயிறு அன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் ஷபியுல்லாகான் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், ஜமாத்துல் உலமா சபை சார்பில் மவ்லவி ரூஹுல் ஹக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் புதுகை, நாகை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.