தூத்துக்குடி, மே 25 -தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆய்வு செய்து, வாகனத்தை சிறப்பாக பராமரித்து வரும் வாகன ஓட்டுநர்களுக்கு வெகுமதி வழங்கினார்.அதன் பிறகு காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 104 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெகுமதி வழங்கி பாராட்டினார்.