நாகப்பட்டினம், செப்.14- மறைமலை நகரில் ரூ.25.811 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். மறைமலை நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் ந.காவியன், செயலாளர் அரிமா.பி.ரூசோ, துணைத் தலைவர் என்.நாகராஜன், டாக்டர்.என்.செல்வி மற்றும் அரிமா சங்கத் தலைவி ஜி.காளிமுத்து உள்ளிட்டோர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீம்அன்சாரி, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், நகராட்சி ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோரை வரவேற்று சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்தனர். மறைமலை நகரில் அரசுக்குரிய இரட்டை வீடுகளில் குடியிருக்கும் அரசு அலுவலர்களுக்கு அந்தந்த வீடுகளைச் சலுகை விலையில் அரசு உரிமையாக்கித் தர வேண்டும் என்று சங்கத் தலைவர் ந.காவியன் அமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்தார். மாவட்ட நிர்வாகம் வழியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து புனரமைக்கப்பட்ட அக்கரைக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார். வார்டு-25ல் நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்காடிக் கட்டிடம், நெய்தல் நகரில் புதிய பூங்கா, நாகை மற்றும் நாகூரில் தூய்மை இந்தியா- திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் அமைக்கப்பட்ட நுண் உரக் குடில்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்.