அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் தலித் மக்கள்
தரங்கம்பாடி, செப்.26- நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், தேரிழந்தூர் அருகேயுள்ள தொழுதாலங்குடி கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கக்கூடிய கன்னியம்மன் கோவில் தெரு இணைப்பு சாலை கடுமையாக சேதமடைந்து நடந்துக் கூட செல்ல முடி யாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தேரிழந்தூர் அருகேயுள்ள தொழுதாலங்குடி கிராமம், கன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை இணைக்கக் கூடிய சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி யினர் கூறுவதோடு,சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் ஆபத்தான நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியவில்லை என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்துடன் நாள்தோறும் செல்வதாகவும், தற்போது மழை பெய்து வருவதால் சேறும்,சகதியுமான சாலையில் தடுமாறி கீழே விழுந்து செல்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேப் போன்று தெருவிளக்கு,குடிநீர் வசதிகளும் முறையாக இல்லையென கூறுகின்றனர்.பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இதுவரை இல்லாததால் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப்,26-ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் செய்கின்ற ஆரம்ப சங்கங்களிலேயே சத்து, அளவை குறித்து கொடுத்திட வேண்டும். ஆவின் பால் கொள்முதல் தினசரி 50 லட்சம் லிட்டராக உயர்த்திட வேண்டும். ஆவின்பால் விற்பனை முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி கிளைகள் சார்பில் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்க மணப்பாறை வட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி வி.ச. மாவட்ட செயலாளர் சிதம்பரம், வட்ட செயலாளர்கள் வெள்ளைச்சாமி, முருகேசன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட தலைவர் கோபால கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் ராஜகோபால், விதொச வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் பேசினர். ஜான் பிரிட்டோ, பழனி சாமி, திருநாவுக்கரசு, முருகேசன், மருகிருதம்மாள், சகாய செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.