tamilnadu

img

மடிக்கணினி வழங்கக் கோரி முசிறி மாணவர்கள் போராட்டம்

முசிறி, ஜூன் 28- திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு 2 ஆண்டு முடிவடைந்த நிலையில் அரசின் இலவச மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. இதைதொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மடிக்கணினி வழங்க கேட்டு முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர்.  இந்தாண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு மடிக்கணினி வந்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போது பள்ளிகளுக்கு வந்துள்ள மடிக்கணினி தற்போது பள்ளியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டதற்கு எங்களுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்து விட்டார். எங்களுக்குரிய மடிக்கணினிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.