ஆண்டி குளப்பம்பட்டி தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு
துக்கோட்டை, ஏப்.19- புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டி குளப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா ஆகியோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள ஆண்டி குளப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா, கல்வி புரவலர்கள் இணைப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், அபாகஸ் பயிற்சி பெறும் மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில்,”தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக இருப்பதோடு, சிறப்பான திட்டங்களால் கல்வியில் முதன்மை மாநிலமாகவும் விளங்குகிறது. இங்கே மாணவர்களின் பல்வேறு கலைத் திறமைகளைப் பார்த்து வியந்து போனேன். கல்வித்துறையால் வழங்கப்படும் பல்வேறு விருதுகள் இந்தப் பள்ளியை வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதான சாலையில் இருந்து இந்தப் பள்ளிக்கு வரும் சாலை அடுத்த மூன்று மாதத்திற்குள் செப்பணிட்டுத் தரப்படும்” எனக் கூறினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பா.செந்தில், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பெ.நடராஜன், வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, இர்சாத், வட்டார மேற்பார்வையாளர் த.பாரதிதாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தே.ஞானசேகர் வரவேற்க, ஆசிரியர் தேவ ஆரோக்கியநாதன் நன்றி கூறினார்.