வாலிபர் கொலை?
தஞ்சாவூர் ஜூலை.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி- திருச்சிற்றம்பலம் சாலையில் நரியங்காடு ஏழுமுக காளியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை காலை முகம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பது குறித்து தகவலறிந்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் அங்கு சென்றனர். இறந்து கிடந்தவர் ஊதா நிற கால் சட்டை, வெள்ளை நிற பனியன் அணிந்திருந்தார். அவர் கொண்டு வந்த பொருட்கள் அருகிலேயே கிடந்தன. முகம் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காண முடியவில்லை. உடலைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்த இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போட்டோகிராபர் அசோசியேசன் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை.14- புதுக்கோட்டை மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் அறிக்கையை செயலாளர் கைலாஷ் தாக்கல் செய்தார். பொருளாளர் அறிக்கையை பொருளாளர் சுந்தர்ராஜ் தாக்கல் செய்தார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள கேமரா பயிற்சி அளிப்பது, அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.
ஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூலை.14- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி(பொ) சாந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 2019-20-ம் ஆண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவ, மாணவிகள் திங்கட்கிழமை முதல் வரும் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் பயோமெட்ரிக் தொட்டுனர் கருவி வாயிலாக காலை,மாலை நேரங்களில் வருகைப்பதிவு செய்வதையும், மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவு செயலியில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளின் விபரங்களை குறுந்தகவல் அனுப்புவதையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் பெறப்பட்ட விபரம், மீதம் இருப்பு விபரம் ஆகியவற்றை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்டவை கூறினார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.