1956 முதல் 26 ஆண்டுகளாக தஞ்சை தென்னாற்காடு, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கான தனி மாநில அமைப்பு உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்க முதல் மாநில மாநாடு 1981-ல் மே 30-31 தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் பி.எஸ்.ஆர் அரங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டை தோழர் ஆர்.ராமராஜ் கொடியேற்றி துவக்கிவைத்தார். இந்த மாநாட்டின் மூலம் விவசாய தொழிலாளர் சங்கத்துக்கான மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டு முதல் மாநில தலைவராக தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியும் முதல் மாநில பொதுச்செயலாளராக தோழர் பெரி.குமாரவேலும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவராக தோழர் என்.வரதராஜன், துணைச் செயலாளராக தோழர்.எம்.செல்லமுத்து தேர்வு செய்யப்பட்டார்கள். மாநாட்டிற்கு வெண்மணியிலிருந்து கொடியும் பூந்தாழங்குடியிருந்து கயிறும், சிக்கலிருந்து கொடி மரம், களப்பாலிருந்து தியாகி, குப்புசாமியின் உருவப்படமும், ஜாம்புவான்னோடையிலிருந்து தியாகி சிவராமன் சுடரும் எடுத்துவரப்பட்டு மாநாடு உணர்ச்சி பொங்க நடைபெற்றது. இரண்டாம் நாள் 31-ந்தேதி மாலை திருத்துறைப்பூண்டி நகரில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்த மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது, மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்த தோழர் என்.பி.கண்ணுசாமி பொதுக்கூட்டத்தில் வரவேற்புரையாற்றினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மூத்த சகோதரர் கணபதி சுந்தரம் செங்கொடி இயக்கத்தின் புரட்சி பாடல்களை பாடி எழுச்சியை ஏற்படுத்தினார். இதில் சங்கரய்யா, ஜி.வீரய்யன் உள்ளிட்ட தோழர்கள் பேசினார்கள்.
1982 மேற்குவங்கம் மிட்னாபூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய முதல் மாநாடு நடைபெற்றது. அதில்தான் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு இணைந்துகொள்ளப்பட்டு தீவிரமாக தமிழ்நாட்டில் செயல்பட ஆரம்பித்தது. அந்த அகில இந்திய மாநாட்டில் தோழர் பெரி.குமாரவேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. இரண்டாவது தமிழ்மாநில மாநாடு தஞ்சை நகரில் 1986-ல் செப்-2,3 தேதிகளில் நடைபெற்றது. இதில் எம்.செல்லமுத்து தலைவராகவும் செயலாளராக தோழர் பெரி.குமாரவேல் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாவது அகில இந்திய மாநாடு கேரளமாநிலம் பாலக்காட்டில் டிசம்-10,11,12 தேதிகளில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கீழ வெண்மணி நினைவிடத்திலிருந்து தோழர் பெரி.குமாரவேல், எம்.செல்லமுத்து, கே.வரதராசன் உள்ளிட்ட தோழர்கள் நினைவு ஜோதியை குழுவாக எடுத்துச் சென்று கலந்துகொண்டனர். இப்படி தோழர் பெரி.குமாரவேல் தமிழக விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் 20-ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட்டு விவசாயத் தொழிலாளர் சங்க அமைப்பை தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வலுவுடன் உருவாக்கினார். அவரின் பணி இப்போதும் தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது. இன்று 90 வயதை எட்டும் வாழும் வரலாறாக தோழர் பெரி.குமாரவேல் உள்ளார் என்பது இளைய தலைமுறைக்கு ஒருபெரும் உத்வேகத்தை ஊட்டுகிற செய்தியாக உள்ளது.