பாபநாசம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கும்பகோணம், ஜூலை 13- கும்பகோணம்- தஞ்சை பிரதான சாலையில் பாபநாசம் அருகே உள்ள நெடுந் தெருவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் தாலுகா கிராமங்களில் இருந்து மாணவர்கள் சுமார் 1500 பேர் படித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் வெளியூரிலிருந்து பேருந்தில் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் கல்லூரி முன்பு உள்ள நிறுத்தத்தில் எந்த பேருந்தும் நின்று செல்லாமல் செல்கிறது. இதனால் மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீண்ட தூரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே அனைத்து பேருந்துகளும் மாணவர்களை நின்று ஏற்றி சென்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாபநாசம் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் திங்கட்கிழமை மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் வரும் புதன் கிழமை அனைத்து கல்லூரி மாணவர்களும் சேர்ந்து போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை ஏற்றார். துணை செயலாளர் வீரையன் துணை தலைவர் பிரபாகரன் உள்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
திருத்துறைப்பூண்டி ஜூலை 13- திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் 18 வது வார்டு பெரிய சிங்களாந்தி பகுதிக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்கிடக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் 10-ம் தேதி நடைபெற இருந்தது இதையொட்டி முன்னதாக மாலையில் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் மற்றும் கட்சி நகரக்குழு சார்பில் நகராட்சி அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 18வது வார்டு பெரியசிங்களாந்தி பகுதிக்கு உடனடியாக பழைய குடிநீர் பைப் லைனை மாற்றி புதிதாக அமைப்பது என்றும், சிங்களாந்தி பகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக நிதி பெற்று அமைத்து தருவது என்றும், பாம்பாளம்மன் கோவில் தெருவில் பழுதடைந்த மின்கம்பங்களை மின்வாரியம் மூலம் உடனடியாக சரிசெய்வது என்றும், சுடுகாட்டு பாதை அமைக்க விரைவாக நிதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததையொட்டி போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பது என உடன்பாடு ஏற்பட்டது. இதில் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், மாவட்ட க்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், நகரக்குழு உறுப்பிர்கள் ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.கோபு, எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகா~;, ஏ.கே.செல்வம் மற்றும் கிளை செயலாளர்கள் கதிரேசன், விஸ்வநாதன் மற்றுமு; கிராம கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் பெரியகுளத்தை தூர்வாரக் கோரிக்கை
சீர்காழி ஜூலை 13- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் உள்ள சேத்திருப்பு கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான பெரிய குளம் உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குளத்தில் வாய்க்கால் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து தேக்கி குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். பண்டாரஓடை, மணியார்தெரு, காவல்மணியம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை முழுமையாகப் போக்கி பயன்பட்டு வந்தது. வருடந்தோறும், கிராமப் பொது மக்கள் சார்பில் தூர்வாரியும் ஆழ்ப்படுத்தியும் இக்குளத்தில் தண்ணீரைக் தேக்கியும், குளத்தைச் சுற்றி வேலி அமைத்தும் தண்ணீரை பாதுகாத்து வந்தனர். ஆனால் காலப் போக்கில் இக்குளத்தை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேத்திருப்பு பெரியகுளம் முற்றிலும் தூர்ந்து தண்ணீர் குளத்திற்குள் வர முடியாமல், தேங்க வழியின்றி மேடாகி குளம் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், சேத்திருப்பு பெரியகுளம் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீரை அளித்து வந்தது. அந்த அளவிற்கு ஊர் மக்களால் குளம் பராமரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 15 வருடங்களாக இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த குளத்தை தூர்வாரி ஆழ்படுத்தினால் நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், தண்ணீரை முறையாகப் பயன்படுத்தவும் முடியும். எனவே 15 வருடமாக தூர்வாராத பெரிய குளத்தை உடனடியாக தூர்வாரி ஆழ்படுத்த வேண்டும்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் துவக்கம்
புதுக்கோட்டை, ஜூலை.13- புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 76 எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தேங்காய் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்புக்கூட்டி தேங்காய் கொப்பரையாக விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் 450 மெட்ரிக் டன் அரவை கொப்பரையும், 50 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முதன்மை கொள்முதல் நிலையமாகவும், அறந்தாங்கி தென்னை வணிக வளாகம் துணை கொள்முதல் நிலையமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசினால் 2019-ம் ஆண்டில் அறிவிக்க ப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.99.20 மற்றும் அரவை கொப்பரைக்கு ரூ.95.21 என்ற விலையிலும் கொள்முதல் செய்ய ப்படும். கொப்பரை கொள்முதல் கடந்த 7-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி வரை 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அணுகி தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல் பொருட்கள்(1 சதவீதம்), பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம்(எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம்(எண்ணிக்கையில்) சில்லுகள் 10 சதவீதம்(எடையில்) ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்கலாம். பந்து கொப்பரையின் குறைந்தபட்ச தரம் சுற்றளவு 75 மி.மீ (குறைந்தபட்சம்) அயல் பொருட்கள் 0.2 சதவீதம் (எடையில்), பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 2 சதவீதம் (எண்ணிக்கையில்) சருக்கம் கொண்ட கொப்பரைகள் 10 சதவீதம் (எண்ணிக்கையில்) சில்லுகள் 1 சதவீதம் (எடையில்) ஈரப்பதம் 7 சதவீதம் கொண்டதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி பேரூராட்சி சாலை புதிதாக அமைக்கப்படுமா?
தஞ்சாவூர் ஜூலை13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் முதன்மை சாலைக்கு நிகராக, அதிகப் போக்குவரத்து உள்ளது பேரூராட்சி சாலை. முதன்மைச் சாலையில் உள்ள வேதாந்தம் திடலில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறும் காலங்களில், பேருந்துகள் செல்லக்கூடிய மாற்றுச் சாலையாகவும் உள்ளது. இந்த பேரூராட்சி சாலையானது 1 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை காங்கிரீட் சாலையாக 500 மீட்டர் போடப்பட்டது. பிறகு மீதம் உள்ள சாலையை தார்ச்சாலை ஆகவும் போட்டிருந்தனர். இந்நிலையில் இந்தச் சாலை மழைக்காலங்களில் பெய்கிற மழை தண்ணீர் வெளியே செல்ல முடியாத நிலையில் தெப்பக்குளம் போல் காட்சியளித்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகால் இந்த பேரூராட்சி சாலையில் அமைக்கப்பட்டது. அதுவும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சுமார் 300 மீட்டர் மட்டும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்து விட்டு, பிறகு உள்ள பகுதிகளில் அமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அந்த மழைநீர் வடிகால் வாய்க்கால், பராமரிப்பு இல்லாமல், தற்போதைய நிலையில் குப்பைத்தொட்டி ஆகவும், கழிவு நீர் செல்லும் பாதையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும் இப்பகுதியில் செல்லும் பேருந்தை, இருசக்கர வாகனம் முந்திச் செல்லும் போது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழும் ஆபத்தான நிலையும் காணப்படுகின்றன. இந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் அதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மூடி எப்போதும் திறந்து கிடப்பதாலும், காங்கிரீட் பலவீனமாக உள்ளதால் அதன்மீது நடந்து சென்றால் கூட கீழே விழும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில், சேதமடைந்து கரடு முரடாக இருக்கும் சாலையை அகற்றிவிட்டு, இப்பகுதியில் அமைத்த மழைநீர் வடிகாலை முழுமையாக அமைத்து பேரூராட்சி சாலை முழுவதும் புதிய சாலை அமைத்துத் தர வேண்டும். போக்குவரத்திற்கு நெருக்கடியான சூழல் உள்ள கட்டத்தில் விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தவறி விழுந்த வாலிபர் பலி
சீர்காழி ஜூலை 13- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சின்ன குத்தவக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமையா மகன் மூர்த்தி(48), கார் டிரைவர். இவர், சம்பவத்தன்று இரவு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையின் குறுக்கே உள்ள அழிஞ்சியாறு கதவணை மதகில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே 40 அடி ஆழத்தில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.