திருச்சிராப்பள்ளி, ஜூன் 22- திருச்சி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் 6022 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவானது 25 ஆண்டுகளாக போக்குவரத்து விதிகளை குழந்தைகள்-சிறார்-பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரால் இப்பூங்காவினை அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு அமைத்திட தீர்மானிக்கப்பட்டு இச்சிறுவர் பூங்கா, கடந்த 29.8.2018-ம் தேதியன்று மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. மேம்படுத்தப்பட்ட சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவானது தன் நிறைவுத் திட்டத்தின்கீழ் சுமார் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே சிறுவர்களுக்கான போக்குவரத்து பெரிய பூங்கா பட்டியலில் 3-வது இடத்தில் அமைந்துள்ளது.பூங்காவின் திறப்பு விழா சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில், மாநகரம் காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.