tamilnadu

தஞ்சாவூர் ,சீர்காழி மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

அரிய வகை கடல் வாழ்  உயிரினங்களை பாதுகாக்க கோரிக்கை

தஞ்சாவூர் ஜூன்.9- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உலக பெருங்கடல் தின விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் பேசினார். கடலோரக் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகரன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.தாஜூதீன், நம்மாழ்வார் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் சண்முகசுந்தரம், பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின், ஐபேட் நிறுவன அலுவலர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். மீன்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை, டால்பின் மற்றும் பவளப் பாறைகளை பாதுகாக்க வேண்டும். கடலுக்குள் சட்டவிரோத செயல்கள், அன்னியர் நடமாட்டம் குறித்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. 

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜூன் 9- ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட்டு பயிற்சி பெற்ற வேலையில்லாத ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசியர் சங்க மாநில செயலாளர் அசோக்குமார் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் நல்லமணி, வட்டார பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

சாலை விபத்தில் இருவர் பலி  

புதுக்கோட்டை, ஜூன்.9-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அத்தாணியைச் சேர்ந்தவர் ஜெ.சொக்கலிங்கம்(53). இவர், தட்டான்வயல் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரும், பூவைமாநகரைச் சேர்ந்தவரும் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தவருமான கே.காளிதாஸம்(47) அறந்தாங்கி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கே.சத்தியராஜ்(30), வன்னியம் பிள்ளைவயலைச் சேர்ந்த சி.ரெங்கநாதன்(27) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் சொக்கலிங்கம், சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ரெங்கநாதன், காளிதாஸ் ஆகியோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து நாகுடி காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  

திருச்சிராப்பள்ளி, ஜூன் 9- திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் பள்ளி விடுதிகள் 42-ம், கல்லூரி விடுதிகள் மாணவியருக்கு 3-ம், மாணவருக்கு 2-ம், ஆக 5-ம், திருவெறும்பூரில் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி 1-ம், ராஜாகாலனியில் முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி 1-ம் ஆக மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும், தொழிற்பயிற்சி(ஐடிஐ) விடுதியில் மாணவர்களும், முதுகலை மாணவர் விடுதியில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களும் சேரலாம். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை 20.6.19-க்குள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை 5.7.19-க்குள் விடுதிக் காப்பாளரிடமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பள்ளிகளிலும்  குழந்தைகளுக்கான தொலைபேசி எண் 1018 காட்சிப்படுத்த அறிவுறுத்தல்  

திருச்சிராப்பள்ளி, ஜூன் 9- திருச்சி ஆட்சியர் கூட்டரங்கில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் ஆட்சியர் சிவராசு முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் தொடர்பான மீளாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளி குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1018 காட்சிப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் காணமல் போகும் குழந்தைகள் தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுத்தப்பட்டது. மாவட்ட சமுக நல பாதுகாப்பு அலுவலர் தமீம்முனிஷா, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.